சிசேரியன் பிரசவம் ஏன்?



கர்ப்பிணிப் பெண்கள் எல்லோருக்குமே தங்களுக்கு நடக்கப்போவது இயற்கையான சுகப்பிரசவமாஅல்லது அறுவை சிகிச்சையாக அமைந்துவிடும் சிசேரியன் பிரசவமா? என்ற  கேள்வி எழும்.

சில சூழ்நிலைகளையும், பரிசோதனை முடிவுகளையும் வைத்து அந்த கர்ப்பிணிக்கு சிசேரியன் தான் என்று முதலிலே டாக்டர்களால் முடிவு செய்திட முடியும்.
சில கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இறுதிக்கட்ட நெருக்கடி சிசேரியன் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு சென்றுவிடும்
  • வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை, நான்கு கிலோவோ அதற்கு அதிகமாகவோ இருந்தால் அந்த பிரசவத்திற்கு சிசேரியன் தேவைப்படும்
  • கர்ப்பிணியின் கருப்பையின் அடிப்பகுதியில் `பைபிராய்டுகள்' `டியூமர்கள்' இருந்தால் அது சுகப்பிரசவத்திற்கு தடையாகி விடும்.
  • நஞ்சுக்கொடி கருப்பையின் அடிப்பகுதியில் இருந்தால், பிரசவத்தோடு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு விடும். இதைத் தவிர்க்க சிசேரியன் தேவைப்படும்
  • கர்ப்பிணி குள்ளமானவராக இருந்தால், சிசேரியன் தேவையாக இருக்கும்
  • பிரசவம் நெருங்கும்போது குழந்தையின் தலை கீழ்நோக்கி தனியாக திரும்பி வரவேண்டும்.அதற்கு வாய்ப்பில்லாமல் குழந்தை கருப்பையில் குறுக்காக கிடந்தால், தலை திரும்பி வராது என்பதால் சிசேரியன் அவசியமாகும்
  • அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கும், கருப்பையில் இருக்கும் திரவத்தின் அளவு குறைந்து காணப்படுகிறவர்களுக்கும் சிசேரியன் பரிந்துரைக்கப்படுவதுண்டு.
சுகப்பிரசவம் என்று முடிவு செய்துவிட்டு சிலருக்கு கடைசி நேரத்தில் திடீரென்று சிசேரியன் செய்யப்படுவது ஏன்
  • பிரசவ நேரம் நெருங்கியும் சிலருக்கு பிரசவ வலி தோன்றாது
  • பிரசவ வலி உருவானாலும் சிலருக்கு தேவையான அளவு கருப்பை சுருங்கி குழந்தையை வெளியே தள்ளாது. சிலருக்கு குழந்தையின் தலை இறங்கி வருவதற்கு பதிலாக முகம் இறங்கி வரும்.
  • சிலருக்கு குழந்தையின் பின்பகுதி கீழ்நோக்கி இறங்கி வரும். சிலருக்கு `மெம்பிரைன்' உடைந்து தொப்புள்கொடி முதலில் வெளியே வரும். அப்போது ரத்த ஓட்டம் குறைந்து, குழந்தைக்கு சுவாச தடை ஏற்படாமல் இருக்க அவசரமாக சிசேரியன் செய்யவேண்டியதிருக்கும்
  • சிசுவின் இதய துடிப்பு திடீரென்று குறைந்தாலும் சிசேரியன் தான்.
`ரிஸ்க்` குறைந்தது, சிசேரியனா? சுகப்பிரசவமா?
இரண்டிலுமே பாதிப்பும் உண்டு. பலனும் உண்டு. இயற்கை பிரசவம் நல்லது தான். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாத போது மாற்றுவழியை தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. இயற்கை பிரசவத்திலும் சில சிக்கல்கள் உண்டு. சிசேரியன் என்பது மேஜர் ஆபரேஷன் தான். சாதாரண பிரசவத்தை விட இதில் சில நெருக்கடிகளும் உண்டு.

சிசேரியனுக்காக ஜெனரல் அனஸ்தீஸ்யா, ஸ்பைனல் அனஸ்தீஸ்யா, எபிடியூரல் அனஸ்தீஸ்யா போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை கொடுப்பார்கள். இதில் கர்ப்பிணியின் விருப்பத்தை முதலிலே டாக்டர்கள் கேட்டறிவார்கள்

ஸ்பைனல் அனஸ்தீஸ்யா கொடுத்தால் கர்ப்பிணிக்கு நினைவிழப்பு ஏற்படாது.முதுகெலும்பில் மயக்க மருந்து ஊசி குத்தி வயிறு, கால்கள் மட்டும் மரத்துப்போகும்படி செய்வார்கள்

எபிடியூரல் அனஸ்தீஸ்யா என்றால் வயிறு மட்டுமே மரத்துப் போகும். அப்போது தனக்கு நடக்கும் பிரசவத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் தாயால் உணரமுடியும்

முதுகெலும்பில் மயக்க மருந்து ஊசி குத்தி சிசேரியனுக்கு உட்படும் தாய்மார்களுக்கு பின்பு முதுகுவலி ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குழந்தை பிறந்த பின்பு, தாய் தன் உடலை சரியாக பராமரிக்காததால் முதுகு தசைகளில் ஏற்படும் அழுத்தமே அந்த வலிக்கு காரணமாகும்

பிரசவத்திற்கு பின்பு செய்யப்படும் உடற்பயிற்சிகள், படுக்கும் மெத்தை, படுக்கும் முறை, உணவுப்பழக்கம் போன்றவைகளால் முதுகு வலியைக் குறைக்கலாம்

சிசேரியனுக்கு பிறகு தாயின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீர் அளவு, ரத்தப்போக்கு போன்ற அனைத்தையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.

24 மணி நேரத்திற்குள் தாய் சுயமாக எழுந்து, நடக்கலாம். இரண்டு நாட்கள் ஆன பின்பு நடக்கும் தூரத்தை அதிகரிப்பது மூலம் காயம் வேகமாக ஆறும். மூன்றாம் நாள் முதல் கெட்டியான உணவுகளை சாப்பிடலாம். ஐந்தாம் நாள் வீட்டிற்கு சென்று விடலாம். வீட்டிற்கு சென்ற பின்பும் இரண்டு வாரங்கள் எதையும் தூக்க முயற்சிக்கக் கூடாது.

நிறைய தண்ணீர் பருகி, காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட்டால் மலச்சிக்கல் தோன்றாது. அதிக அளவில் மாடிப்படிகள் ஏற, இறங்கக் கூடாது. சிசேரியனால் அடிவயிற்றில் ஏற்படும் காயம் ஆறு வாரங்களில் முழுமையாக ஆறி விடும்.
-டாக்டர்.ஜெயராணி

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.