இதயமே இதயமே….





உலக சுகாதார அமைப்பு,ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு உள்ளது. இதுவரை உலகிலேயே சர்க்கரை வியாதியின் தலைநகரமாக விளங்கிய இந்தியா, இப்போது "ஹார்ட் அட்டாக்"தலைநகரமாக
உருவெடுத்துள்ளது.

இன்னும் 9 ஆண்டுகளில் அதாவது 2020-ல் இரத்த அழுத்த நோய்க்கும் தலைநகரமாக இந்தியா உருவாகுமாம்.2020-ல் இந்தியா வல்லரசாகும் என்ற கனவுக்கு மத்தியில் இப்படி ஒரு அதிர்ச்சித்தகவல்.உலக அளவில் இந்த நோய்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியர்கள் முதலிடத்தில் வருகின்றனர்.

உலக அளவில் 17.1 கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதயநோயால் உயிரிழக்கின்றனர்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சிகரெட், மது பழக்கமுள்ளவர்கள், கொழுப்புச்சத்து(“கொலஸ்டிரால்” மற்றும் “ட்ரைகிளிசரைடுகள்”) மிகுதியாக உள்ளவர்கள்,உடல் பருமனானவர்கள், அளவுக்கு அதிகமாக உணவு உண்பவர்கள், எப்போதும் டென்ஷனாக இருக்கிறவர்கள், எந்த வேலையும் செய்யாமல் உடலுழைப்பு இல்லாதவர்கள், ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவர்கள், பெண்களில் மொனோபாஸ் கடந்தவர்கள், இவர்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஏனெனில் இவர்களுக்கெல்லாம் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதயநோய் வராமல் தடுக்க சில வழிகள் உள்ளன.
  • இரத்தத்தில் “சர்க்கரை” அளவு , “கொலஸ்டிரால்” மற்றும் “ட்ரைகிளிசரைடுகள்” அளவு ஆகியவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கொலஸ்டிரால்,ட்ரைகிளிசரைடுகள்,சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை எந்த அளவுகளில் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்   கொள்வது என்பதற்கான அளவு வரைபடம் இதோ!
    • தகுந்த கால இடைவெளியில் அவ்வப்போது மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அதை பின்பற்றுவதும்,உடல் பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.
    • லைஃப் ஸ்டைல் எனப்படும் வாழ்க்கைமுறையை, முறையாக மாற்றிக் கொள்வதும்,பாஸ்ட் புட் உணவுப் பழக்கத்தை மாற்றி சரிவிகித சத்தான உணவு பழக்கத்தை பின்பற்றுவதும் அவசியம்.
    • முன்பு பின்லாந்து மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் அதிகமாக இதயநோய் உள்ளவர்கள் இருந்தனர். அந்த நாடுகள் மக்களிடையே பால் மற்றும் பாமாயில் உபயோகத்தை மிகவும் குறைக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இதய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 
    • ஆனால் நம் இந்தியாவில் பல்வேறு எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாமாயில் ரேசன் கடைகளில் மலிவு விலையில் கிடைப்பதால் அதில் இருக்கும் கொழுப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமலும்,மலிவு விலை என்பதாலும் வீடுகளிலும்,சாலையோர கடைகளிலும்,ஹோட்டல்களிலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இதுவும் ஒரு காரணம்.
    • இதயநோய் வராமல் தடுக்க கொழுப்பு சத்து குறைவாக உள்ள எண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் முடிவு செய்ய வேண்டும்.
    • நாம் எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதை கல்லீரல் கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாற்றுகிறது. சாப்பாட்டில் கட்டுப்பாட்டை எப்போதும் பின்பற்ற வேண்டும். 
    • அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். மதியம் காலையில் சாப்பிட்டதைவிட சற்று குறைவாகவும் இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிட வேண்டும். இரவில் படுப்பதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பு சாப்பிடும் பழக்கம் நல்லது.
    • உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்தால் இதயநோய் நிச்சயம் வரும். எனவே தினமும் அல்லது வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சி அல்லது தியானம் செய்ய வேண்டும்.
    • சிகரெட், மது பழக்கமுள்ளவர்கள் தம் உடல்நலம் கருதி அதை விட்டு விட வேண்டும்.
    • எவ்வளவு சிரிக்கமுடியுமோ அந்த அளவுக்கு வாய்விட்டு சிரிக்கவேண்டும். எப்போதும் மன இறுக்கத்தோடு இருக்காமல் எதையும் மகிழ்ச்சியோடு அணுக வேண்டும்.
    • நல்ல புத்தகங்கள், திக்ரு அல்லது தியானம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.
    • உடல் பருமனானவர்கள் தன் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருக்க,உடல் எடைக்குறைப்பு முயற்சியில் மருத்துவரின் ஆலோசனையுடன் ஈடுபட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டால்,அது பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
    • ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தம் குடும்பத்தில் யாருக்கேனும் இதயநோய் 60 வயதில் ஏற்பட்டு இருந்தால்,நமக்கு 25 அல்லது 30 வயதிலேயே இந்த நோய் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக இதயநோய் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 
    • வயது கட்டுப்பாடின்றி எவருக்கு வேண்டுமானாலும் இதய நோய் வரக்கூடும்.
    • பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக டென்சன் இல்லாமல் இருக்கவேண்டும். 
    • இரவில் குறைந்தபட்சம் 5 மணிநேரமாவது தூங்கவேண்டும்.
    இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
    • மீன் தவிர மற்ற அசைவ உணவுகளை மிகக் குறைந்த அளவில் உண்ணுதல் நலம்..
    • ஒரு முட்டையில் 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருப்பதால், அதை தவிர்ப்பது நல்லது.
    • பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்யப்பட்டவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்னில் அடைத்த உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
    • ‘ஊறுகாயும் அப்பளமும் போல ஆபத்தானது வேறு இல்லை. காரணம், அதில் சேர்க்கப்படும் சோடியம் உப்பு. ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.
    சாப்பிடக்கூடிய உணவுகள்:
    • கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,
    • அசைவத்தில் மீன் மட்டும் (அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)
    • ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம், கொழுப்பு சத்து குறைவாக உள்ள எண்ணெய்.
    • கொழுப்பு குறைந்தாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
    இவற்றை பின்பற்றினாலே நம் இதயத்தை நாம் பாதுகாக்கமுடியும்.

    0 comments:

    Your Comments Please!

    இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.