அதிரையில் இணைவைப்பு நிகழ்வுகள்



அல்லாஹ்வுக்கு இணை வைப்பது மிகப் பெரிய பாவமாகும்.
மறுமை நாளில் அல்லாஹ் மன்னிக்காத பாவங்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது இணை வைப்பாகும். அல்லாஹ்விற்கு இருப்பதைப் போன்ற சக்தி மற்ற எவரிடம் இருப்பதாக நாம் கருதினாலும் நாம் இணை வைப்பு என்ற மாபாதகமான செயலில் ஈடுபட்டவர்களாகக் கருதப்படுவோம்.

''எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என இறைவனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் சுபச் செய்தியைக் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், ''அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?'' என்று கேட்டேன். ''அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும் தான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) (நூல்கள்: புகாரீ 1237, முஸ்லிம் 153)

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன்,039:065, 066)

என்னுடைய உம்மத்தில் 70000 நபர்கள் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் பிரவேசிப்பார்கள். மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள், சகுணம் பார்க்க மாட்டார்கள், தமது ரப்பிடத்திலேயே தமது காரியங்களை ஒப்படைத்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புஹாரி,முஸ்லிம்)

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அதிரையில் அல்லாஹ்விற்கு இணை வைக்கும் செயல்களில் சில பெருகி இருந்தன. அதிரை பெண்கள் தர்ஹாக்களுக்கு சென்று வழிபடுவதும்,நேர்ச்சைகள் செய்வதும்,கந்தூரிகளில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதும்,தாயத்து மந்திரித்து குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் அணிவிப்பதும் என பல்வேறு மூடத்தனமான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு இருந்தன.அல்லாஹ்வின் அருளால் அதிரையில் ஆலிம்களின் பயான்கள் மூலம் எண்ணற்ற பெண்கள் மேற்கண்ட வழிகேட்டிலிருந்து திருந்தி நேர்வழி பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் சமீப காலமாக வீட்டு ஆண்களுக்கு தெரியாமல் சில 'ஷிர்க்'கான காரியங்களில் நம் பெண்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

ஆம்.கேட்பதற்கு கசப்பாக இருப்பினும் உண்மை நிலை இது தான்.

ஹஜ்ரத் என்றும்,அம்மா என்றும் அழைக்கப்படும் சிலர் இந்த மாந்திரீக செயல்களில் ஈடுபட்டு நம் பெண்களிடம் பணம் கறக்கின்றனர்.

மார்க்கக் கல்வியை நன்கு அறிந்தவர்களும்,நன்கு படித்தவர்களும்,செல்வந்தர்கள் சிலரும் கூட இதில் ஈடுபடுவது தான் வேதனையிலும் வேதனையான செய்தி.

அப்படி என்ன செய்கிறார்கள்?

ஒருவருக்கு நோய் ஏற்படுகிறது.அவர் புகழ்பெற்ற மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரது உடல்நிலை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை நடக்கிறது.அவர் மருந்துகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறார்.வீட்டிலுள்ள ஒரு மூதாட்டி சொல்கிறார்,நோயுக்கும் பாக்கனும்,பேயிக்கும் பாக்கனும் என்று.உடன் அந்த மாந்திரீகர்(முஸ்லிம் தான்) வருகிறார்.ஏதோ கோளாறு இருப்பதாக என் கணக்கில் சொல்லுது,நான் ஒரு தட்டை எழுதி தருவேன்,அதை கரைத்து குடித்தால் எல்லாம் சரியாகிடும்,இப்ப எந்த மருத்துவரும் மருந்தும் சரி இல்லை என்று சொல்லிவிட்டு அதற்கு கட்டணமும் பெற்றுக் கொள்கிறார்.சுப்ஹானல்லாஹ்? இவரது கணக்கு என்ன கணக்கு?

ஒருவர் தங்க நகையை தொலைத்து விடுகிறார்,உடன் வேறு எங்கும் செல்வதில்லை,அதற்கும் அவரே(மாந்திரீகர்) கணக்கு போடுகிறார்,உங்கள் நகை தெற்குபக்கமாக போய்க்கொண்டு இருக்கிறது,அங்கு போனால் கிடைத்து விடும் என்கிறார்.அந்த நகை தெற்குதிசையில் போனது இவருக்கு எப்படி தெரியும்?

உலகிலேயே 'மார்க்கெட்டிங்' இல்லாமல் கொடி கட்டி பறக்கும் ஒரே தொழில் இது தான்.

இதை உண்மை என நம்பி எண்ணற்ற பெண்கள் பணத்தையும்,தங்க காசுகளையும்,விலை உயர்ந்த பொருட்களையும் சன்மானமாக அவர்களுக்கு கொடுத்து ஏமாறுகின்றனர்.

எந்த நேரத்தில் கேட்டாலும் எத்தனை பேர் கேட்டாலும் எங்கிருந்து கேட்டாலும் பதிலளிக்கும் ஆற்றல், நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சிலர் எந்த பிரச்சினை என்றாலும் அல்லாஹ்விடம் முறையிடாமல் இவர்களை இறைவனாக எண்ணி இவர்களிடம் முறையிட்டு தம் பிரச்சினையை தீர்க்குமாறு அடிமை போல கெஞ்சி நிற்கின்றனர்.

நம் அதிரையில் சில குடும்பங்கள் மாயம்,மாந்திரீகம் என இவர்களை நம்பி இவர்களுக்கு சன்மானங்களும், அன்பளிப்பும் கொடுத்தே எல்லா செல்வத்தையும் இழந்து ஏழைகளாகி நிற்கின்றன.

அது மட்டுமல்ல, குடும்பத்தில் கணவன், மனைவியின் பேச்சை அப்படியே கேட்டு மனைவியே கதி என இருக்கவும்,சிலர், தம் சொந்தங்கள் தன்னை மீறி எதுவும் செய்யாமல் தனக்கு அடிமை போல் செயல்படவும், சிலர், தம் பிள்ளைகளோ அல்லது கணவரோ தன்னை விட்டு விலகி போகாமல் இருக்கவும், அவர்களிடம் சென்று ஏதோ மந்திரித்து தாயத்து வாங்கும் பழக்கம், நம் அதிரையில் மார்க்கம் பற்றி நன்கு அறிந்த சில நல்ல குடும்பப் பெண்களால் வீட்டு ஆண்களுக்கு தெரியாமல் நடைபெற்று வருகிறது.

இதை அறிந்து யாராவது இது பாவம், அல்லாஹ்விற்கு இணைவைக்கும் செயல்,இந்த செயலை செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறினால், அந்த அறிவுரை கூறுபவர் ஏழையாக இருந்துவிட்டால்,அவருக்கு தாம் முன்பு செய்த ஏதோ ஒரு உதவியை எடுத்துச் சொல்லிக் காட்டி, அந்த ஏழையை மிரட்டி அவர்  வாயை அடைத்து விடுகிறார்கள்.

ஏழையை அவர்கள் மிரட்டி வாயடைக்கச் செய்யலாம்,அல்லாஹ்வை அவர்களால் மிரட்ட இயலுமா?

اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ,ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும்,பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன்)

படைத்த இறைவன் இவ்வளவு தெளிவாக இணை வைப்பின் பயங்கரத்தைக் கூறியிருந்தும் கூட இஸ்லாத்தை ஏற்ற பலர் இன்றும் இணை வைப்புக் காரியத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஈமானை உறுதிப்படுத்தி இணைவைப்பு என்னும் இம்மாபெரும் பேரழிவில் இருந்து நம்மையும்,நம் சந்ததியினரையும் பாதுகாத்து நமக்கு நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.