கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவரா நீங்கள்?



கம்ப்யூட்டரே கதி என அதில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்? அப்படியானால் இது உங்களுக்கான பதிவு தான்.நாளடைவில் உங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளெல்லாம் வர வாய்ப்பு உள்ளது என்பதை இதை படித்து தெரிந்து கொண்டு,உங்களுக்கு தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

கண்பாதிப்பு:
கண் இமைக்காமல் அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம்(glucoma) மற்றும் விழி உலர்வு நோய்(dry eye syndrome) க்கு காரணமாகிறது.

குறிப்பாக கிட்டப் பார்வை (short sight) உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. அதிக வெளிச்சமான திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் ஆபத்தை மெல்ல நாம் உணரும்முன் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும்.

கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி இதெல்லாம் இதன் முதல்கட்ட அறிகுறிகள்.

* கம்ப்யூட்டர் திரை வெளிச்சத்தை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* கம்ப்யூட்டர் இருக்கும் அறையில் ஓரளவு வெளிச்சம் இருக்க வேண்டும்.

* அடிக்கடி கண்ணை இமைப்பது நல்லது.

* இடையிடையே கண்ணை முழுவதுமாக மூடி கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.

* அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி தூர உள்ள பொருளை, காட்சியைப் பார்க்க வேண்டும்.

* மானிட்டருக்கு பின்புறம் ஜன்னல் இருந்தால் நல்லது.

* குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள உலர்ந்த குளிர் காற்று கண் உலர்வுக்குக் காரணமாகும்.

கை மற்றும் மணிக்கட்டு பாதிப்பு:
எப்போதும் கீ போர்டில் தட்டிக் கொண்டிருப்பதும். மவுசை கிளிக்கிக் கொண்டிருப்பதும் விரல்கள், மணிக்கட்டு ஆகியவற்றில் வலி ஏற்படுத்துகிறது.இது RSI (Repetitive Strain Injury) எனப்படுகிறது.

இது வெறும் வலி என்று அலட்சியப்படுத்தாதீர்கள். கைகளில் மின்சாரம் தாக்கினால் என்ன பாதிப்பு உண்டாகுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

ஒரு சிறிய துணி அல்லது பஞ்சு போன்ற பொருளை மணிக்கட்டு சப்போர்ட்டாக வைத்துக் கொண்டு மவுசில் வேலை செய்யுங்கள். இதற்கென்றே தயாரிக்கப்பட்ட மவுஸ் பேட்களும் கிடைக்கின்றன.

கைகளும் கீ போர்டும் சரியான தூரத்தில் சரியான உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் கைக்கு அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கும்.

கழுத்துவலி:
மானிட்டரைப் பார்க்கும் போது நேராகப் பார்க்கும் நிலையில் இருக்கை உயரம் இருக்க வேண்டும். கழுத்தை திருப்பி ஒரு பக்கமாகவோ அண்ணாந்தோ , குனிந்தோ பார்ப்பது கழுத்து வலியையும் நாளடைவில் எலும்புத் தேய்வுகளையும் ஏற்படுத்தும்.

முதுகு வலி:
நல்ல வசதியான இருக்கை, சரியான உயரத்தில் இருக்க வேண்டும். முதுகை வளைக்காமலும் திரும்பாமலும் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். தவறான பொசிசனில் உட்கார்ந்திருப்பது, கை கால்களுக்கு செல்லும் சரியான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். வலி, எலும்புகள் தேய்வு உண்டாகும்.

சமூக பாதிப்பு:
எந்நேரமும் கம்ப்யூட்டரிலேயே நேரத்தை செலவிட்டால் மனைவி, குழந்தைகள் போன்ற நம்மைச் சார்ந்தவர்களிடம் செலவிட நேரம் கிடைப்பதில்லை. இது அவர்களை நம்மிடமிருந்து பிரித்து பல்வேறு பிரச்சினகளை உருவாக்கும்.

தினசரி கொஞ்ச நேரமாவது முற்றிலும் கம்ப்யூட்டரை மறந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காக ஒதுக்க வேண்டும்.

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து: 
எப்போதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தே இருப்பதால் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவு உண்ணும் உணவை விட குறைவாக இருக்கும். இதனால் இரத்ததில் சேரும் அதிகப்படியான கொழுப்புச்சத்து கொலஸ்ட்ராலாக இரத்தக் குழாய்களில் படிகிறது. இது நாளடைவில் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்து உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. அதோடு இதய நோய். சர்க்கரை நோய் எல்லாம் உருவாகி, ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

தொடர்ந்து கம்ப்யூட்டரில் இருக்காமல் இடையிடையே எழுந்து சென்று சில தூரம் நடைப் பயிற்சி கொள்வது மிகவும் நல்ல பழக்கம்.தொடர்ந்து பணிபுரியத் தேவையான புத்துணர்வை இது தரும்.

6 comments:

sameer said...

கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அருமையாக உணர்த்தியது....அதிரைபூங்காவே,உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

அதிரை தஸ்லிமா said...

அதிரைபூங்கா, உங்களால் மட்டும் எப்படி எந்த ஆரவாரமும் இல்லாமல் இவ்வளவு பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்க முடிகிறது? மாஷா அல்லாஹ்!இது போன்ற உபயோகமான கட்டூரைகளை அதிக அளவில் எழுதுங்கள்...ப்ளீஸ்!

அதிரைவாசி said...

கம்ப்யூட்டரில் ஒரேயடியாக உட்கார்ந்து இருந்தால் இவ்ளோ பிரச்சினை வருமா?எனக்கு ரொம்ப தேவையான அறிவுரைகளை மழையாய் பொழிந்து விட்டீர்கள்.Keep it up!

syed hussain said...

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தான், அதுபோல கம்ப்யூட்டரின் முன்னும் அளவோடு உட்காருவது தான் நல்லது என புரிந்து கொண்டேன்.

பாபு said...

தளம் சிறக்க
வாழ்த்துகள்

அதிரைபூங்கா said...

கருத்திட்டமைக்கும், வாழ்த்துக்களுக்கும் தாங்கள் அனைவருக்கும் நன்றிகள்!

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.